பாகிஸ்தானில் ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 18 சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் ஸ்வாட் எனும் ஆறு பாய்ந்தோடுகிறது. வற்றாத ஜீவ நதி என அழைக்கப்படும் இந்த நதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் குளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.
இதை அறிந்து அவர்கள் ஆற்றை விட்டு வெளியேறுவதற்குள் வெள்ளம் அவர்களை சூழ்ந்துகொண்டது. இதனால் கரைக்கு திரும்ப முடியாமல் ஆற்றில் நடுப்பகுதியில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் 18 பேரையும் ஆற்று வெள்ளம் அடித்துச்சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், ஆற்றின் வெவ்வேறு இடங்களில் அவர்களை தேடினர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நல்வாய்ப்பாக 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஆற்றில் குளிக்கவும், கரைக்கு செல்வதற்கும் உள்ளூர் நிர்வாகம் தடை விதித்து இருந்தும் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்துள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.” என்றார். சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் ஆற்றில் சிக்கி, அதில் பலர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.