இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் ; டிரம்ப்

சீனாவுடன் தமது நாடு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியாவுடனும் மிகக் பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் எனக் கோடிகாட்டியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“நாம் இப்போதுதான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதில்லை. அதேவேளை, சிறந்த ஒப்பந்தங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் ஒன்று விரைவில் தெரியவரும்; அது இந்தியாவுடனான ஒப்பந்தமாக, மிகப் பெரிய ஒப்பந்தமாக இருக்கலாம்,” என்று டிரம்ப் கூறினார்.
“எல்லோருடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதில்லை. சில நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை மட்டும்தான் அனுப்புவோம். 25,35,45 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் எளிதாகும். நான் அவ்வாறு செய்வதை எனது அரசுத் தரப்பினர் விரும்பவில்லை. அதை ஓரளவு செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்து. அதேநேரம், நான் விரும்புவதைவிட அதிகமான ஒப்பந்தங்கள் ஏற்படவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்,” என்றும் அவர் விவரித்தார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த மே மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹவர்ட் லுட்னிக் முன்னதாகத் தெரிவித்தார். பத்து முக்கிய வர்த்தகப் பங்காளிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனாவுடனான ஒப்பந்தம் இரு நாள்களுக்கு முன்பு கையெழுத்தானதாக அவர் சொன்னார். பெய்ஜிங் – வாஷிங்டன் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. போர் விமானங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் அரியவகை கனிம வளங்களை சீனா, அமெரிக்காவுக்கு அனுப்பிவைப்பதும் அந்த அம்சங்களில் அடங்கும்.
சீனா தங்களுக்கு அரியவகை கனிம வளங்களை அனுப்பிவைக்கும் என்றும் அதற்குப் பிறகு, தாங்கள் பதில் நடவடிக்கையாக விதித்த கட்டுப்பாடுகள் அகற்றப்படும் என்றும் புளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் லுட்னிக் தெரிவித்தார். வரும் வாரங்களில் டிரம்ப் மேலும் பல வர்த்தக ஒப்பந்தங்களை வரைந்து முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் லுட்னிக் கூறினார்.
உலக நாடுகள் மீது டிரம்ப்பின் வரிவிதிப்பு வரும் ஜூலை மாதம் 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகள் மீது கணிசமான அளவில் வரிவிதிக்கப்படும்