மலேசியாவின் கோலாலம்பூரில் கடைத்தொகுதிக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: இருவர் மரணம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு கடைத்தொகுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரு நபர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நள்ளிரவுக்குப் பிறகு செராஸ் மாவட்டத்தில் உள்ள ஜாலான் லோக் பகுதியில் இருக்கும் கடைத்தொகுதிக்கு வெளியே நடந்தது.
பின்னிரவு 12.15 மணிவாக்கில் இருவர் அவர்களது காரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தலைக்கவசம் அணிந்து வந்த ஒரு கும்பல் இரண்டு நபர்கள் நோக்கித் துப்பாக்கியால் சுட்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் வாகனம்மூலம் தப்பியோடினர்.அதன் பின்னர் செராஸ் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
உயிரிழந்தவர்களன் வயது 40க்கு மேல் இருக்கும் என்றும் அவர்கள் சிபு, சரவாக்கைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோலாலம்பூர் காவல்துறை அதிகாரிகள் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இம்மாதம் 13ஆம் திகதி பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் இதேபோன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அதில் ஒருவர் உயிரிழ்ந்தார், இரண்டு பேர் காயமடைந்தனர்.