கல்கி 2 படத்தில் இருந்தும் நீக்கப்படுகிறாரா தீபிகா படுகோன்?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்புக்கு ரூ.25 கோடி சம்பளம் கேட்டதாகவும், 10% லாபத்தில் பங்கு கேட்டதாகவும், தெலுங்கில் வசனம் பேச விருப்பமில்லை என்றும் கூறியதால் அவர் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தாயான தீபிகா, தனது மகள் துவாவிற்கு நேரம் ஒதுக்க, ஸ்பிரிட் படத்தில் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். அவரது கோரிக்கைகளுக்கு படக்குழு செவி சாய்க்காததால் அவர் படத்தில் இருந்து விலகினார்.
ஏற்கனவே பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோனுக்கு ‘கல்கி 2’ பட வாய்ப்பும் பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை தீபிகா சமீபத்திய பேட்டி ஒன்றில்,
‘ஹீரோவுக்கு இணையான பெயரும், புகழும் எனக்கு உண்டு. அதனால் நான் அவரைப் போலவே சம்பளம் அதிகமாக எதிர்பார்க்கிறேன். இதை ஏற்காவிட்டால் அந்தப் படத்திலிருந்து விலகி விடுவேன்’ என்று கூறியிருந்தார். அவர் ஸ்பிரிட் படத்தை பற்றி தான் இந்த பேட்டியில் சூசகமாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தீபிகா அடுத்ததாக நடிகர் பிரபாஸ் உடன் நடிக்க உள்ள ‘கல்கி 2′ படத்திலிருந்தும் தீபிகாவை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவி வந்தது.
ஆனால் கல்கி 2 படக்குழுவினர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ‘கல்கி 2’ படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் மட்டுமே தொடங்கியுள்ள நிலையில், தீபிகாவை நீக்குவது குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சுமார் 600 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘கல்கி 2898 AD’ படம் அறிவியல் மற்றும் புராணக் கதையம்சம் கொண்டது.
இதில் பிரபாஸ் மட்டுமின்றி கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. கல்கி படத்தின் அமோக வெற்றியால் அதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.