போலந்து ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் ஆதரவு பெற்ற பழமைவாதி கரோல் நவ்ரோக்கி வெற்றி

ஐரோப்பிய நாடான போலந்தில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. எனவே, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் அங்கு நடைபெற்றது. இதில், பழைமைவாத கட்சியைச் சேர்ந்த கரோல் நவ்ரோக்கி 50.89% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தாராளவாத கட்சி வேட்பாளரும் தலைநகர் வார்சாவின் மேயருமான ரஃபால் ட்ராஸ்கோஸ்கி 49.11% வாக்குகளும் பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற கருத்துக்கணிப்பில் பழைமைவாத கட்சி வேட்பாளர் ட்ராஸ்கோஸ்கி வெற்றிபெறுவார் எனக் கூறப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற கரோல் நவ்ரோக்கி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலந்து நாட்டு வெளியுறவுக்கொள்கைகளை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபரின் கையில்தான் உள்ளது. உக்ரைனின் அண்டை நாடாக உள்ள போலந்தில், அமெரிக்கா தனது 10 ஆயிரம் படை வீரர்களை நிறுத்திவைத்துள்ளது.
1983ஆம் ஆண்டு பிறந்த கரோல், ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். தவிர, வரலாற்றாசிரியரான நவ்ரோக்கி, அரசியலுக்குப் புதியவர். சட்டம் மற்றும் நீதிக் கட்சியால் ஈர்க்கப்பட்ட அவர், கட்சியின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் ஊழலில் சிக்காத ஒரு புதிய முகமாக நவ்ரோக்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவர் தேசிய நினைவு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். நவ்ரோக்கியின் ஆதரவாளர்கள் அவரை ’பாரம்பரிய மற்றும் தேசபக்தி மதிப்புகளின் உருவகம்’ என்று வர்ணிக்கின்றனர். அதேநேரத்தில், ரஷ்யா அவரை தேடப்படும் பட்டியலில் சேர்த்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.