‘எந்த ஜனாதிபதி அப்படிப் பேசுவார்? நாங்கள் அப்படி இல்லை’; ட்ரம்ப் சாடிய பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமது ஜனநாயகக் கட்சி தோல்வியுற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு முன்னாள் அதிபர் ஜோ பைடன் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் செயல்பாட்டைக் குறைகூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு திரு பைடன் அளித்த முதல் பேட்டியில், உக்ரேன் போரை டிரம்ப் கையாளும் விதத்தையும் மற்ற நட்பு நாடுகளுடன் அவர் கொண்டுள்ள உறவுமுறையையும் சாடினார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தாம் விலகிய காலகட்டத்தையும் பைடன் தற்காத்துப் பேசினார்.
பிப்ரவரியில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் நடத்திய காரசாரமான சந்திப்பு உட்பட அவரின் வெளிநாட்டுக் கொள்கைகளை பைடன் குறிப்பிட்டுப் பேசினார்.
மெக்சிகோ வளைகுடாவுக்குப் பெயர் மாற்றம் செய்வது, பனாமா கால்வாயைத் திரும்பப் பெற்றுக்கொள்வது, கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பில் டிரம்ப்பின் யோசனைகள் குறித்து திரு பைடன் கருத்துரைத்தார்.
“இங்கு என்ன நடக்கிறது? எந்த அதிபர் இப்படியெல்லாம் பேசுவார்? நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்,” என்றார் திரு பைடன்.
“நாங்கள் சுதந்திரம், ஜனநாயகம், வாய்ப்பு பற்றியவர்கள் – மற்றவற்றைக் கைப்பற்றுவது என்று சிந்திப்பவர்கள் அல்லர்,” என்றும் அவர் கருதினார்.
பைடன் அளித்த பேட்டியில் திரு டிரம்ப்பை பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. என்றாலும், தங்களுக்கு அடுத்துவரும் அதிபர்களை விமர்சிக்க முன்னாள் அதிபர்கள் மறுத்த நடைமுறையிலிருந்து திரு பைடன் விலகினார்.