போரை தற்காலிகமாக நிறுத்த புதிய ஒப்பந்த வரைவு ஒன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல்

காஸா மீதான போரைத் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் புதிய ஒப்பந்த வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக எகிப்தும் கத்தாரும் தெரிவித்துள்ளன.இருப்பினும் ஹமாஸ் போராளிகள் ஒப்பந்தத்தில் உள்ள இரண்டு நிபந்தனைகளில் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலின் புதிய ஒப்பந்த வரைவை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த ஹமாஸ், அதுகுறித்து விரைவில் பதிலளிக்கப்படும் என்றும் கூறியது.
“எங்களுக்குத் தற்காலிகப் போர் நிறுத்தம் தேவையில்லை. போர் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும், காஸாவை விட்டு இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும்,” என்று ஹமாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தது.
இஸ்ரேல் கொடுத்த புதிய ஒப்பந்தத்தில் பாலஸ்தீனத்திற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று ஹமாஸ் கூறியது.இஸ்ரேலின் ஒப்பந்தத்தில் ஹமாஸ் படையினர் ஆயுதமேந்திய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஹமாஸ் ஏற்கவில்லை.
ஆயுதங்களைக் கைவிட்டால் பல ஆபத்துகள் காஸாவுக்கு ஏற்படும், இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஹமாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்ததுள்ளது.புதிய ஒப்பந்த வரைவு குறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் காஸாமீது போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் இரு தரப்புக்கும் இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சரியாகச் செல்லாத காரணத்தால் மார்ச் மாதம் இஸ்ரேல் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.
ஹமாஸ் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் உறுதியாகவுள்ளது.மேலும் ஹமாஸ் போராளிகளைத் துடைத்தொழிக்காமல் போரை நிறுத்தப்போவதில்லை என்றும் இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.ஹமாஸ் கட்டுப்பாட்டில் 59 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 24 பேர் உயிருடன் உள்ளதாக நம்பப்படுகிறது.
ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தும் தூதர்களாக எகிப்தும் கத்தாரும் செயல்பட்டு வருகின்றன.