குறுக்கே வந்த மழை – அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், 4 புள்ளிகளை அடைந்த குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.
தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழையும். இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா மிகப் பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையும்.
நேற்றைய ஆட்டத்தின் போது, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் எடுத்தாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சற்று நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்துவிட்டனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக, அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள்எடுத்தார். கடந்த போட்டியில் 177 ரன்கள் விளாசிய இப்ராஹிம் சத்ரான் இந்த போட்டியில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 60 ரன்களும், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 20 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் எதுவும் அடிக்காமலும், ரஹ்மத் ஷா 12 ரன்களும், முகமது நபி 1 ரன்னிலும், குல்பாடின் நைப் 4 ரன்னிலும், ரஷீத் கான் 19 ரன்னிலும், நூர் அகமது 6 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. இதயடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 12.5 ஓவர்களில் 1விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.