தாய்லாந்தில் நாய்க்குட்டியைக் கடலில் வீசிய நபர் மீது சட்ட நடவடிக்கை
தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தெருவிலிருந்த நாய்க்குட்டியைக் கொடூரமான முறையில் கடலில் வீசியதாகக் கூறப்படுவதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அந்த நபர் மன்னிப்பு கேட்டபோதும், கண்காணிப்பு அறக்கட்டளை அமைப்பான ‘வாட்ச்டாக் தாய்லாந்து ஃபவுண்டேஷன்’ (WDT) அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.நபரின் செயலுக்கு நீதி கோருவதாக அது குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் திகதி சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், நபர் ஒருவர் நாய்க்குட்டியைத் தூக்கி, தன் முழு பலத்துடன் அதைக் கடலில் வீசி எறிவது பதிவாகியுள்ளது.
நாய்க்குட்டியைத் தூய்மையாக்கவே தான் அவ்வாறு செய்ததாக நபர் கூறினார்.நீந்திக் கரையேற அந்த நாய்க்குட்டி போராடிய நிலையில் நபர் அதைப் பலமுறை கடலில் வீசி எறிந்தார்.
அந்த நபரை அடையாளம் காண விரும்புவதாக ‘டபிள்யூடிடி’ அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அவரது செயல் விலங்குவதை என்றும் அது சாடியது.அதையடுத்து, காணொளியைப் பதிவிட்ட அந்த நபர் மன்னிப்பு கேட்டார்.
நாய்க்குட்டியின் மீது அதிகமான ஒட்டுண்ணிகள் காணப்பட்டதாகவும் அதனால் தான் அவ்வாறு அதைத் தூய்மைப்படுத்தியதாகவும் ஆடவர் தன் செயலை நியாயப்படுத்தினார். மேலும், இணையவாசிகளிடமும் அவர் மன்னிப்பு கேட்டார்.
இருப்பினும் அவரை அடையாளம் காண ‘டபிள்யூடிடி’ காவல்துறை உதவியை நாடியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளதாகவும் அது தெரிவித்தது.