ஆறு வார மோதலுக்குப் பின் அமைதி – லெபனானில் மீள்குடியேற்றம் தொடக்கம்
பெய்ரூட்டில் நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதை மக்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வாணவேடிக்கைகளுடன் கொண்டாடினர்.
காலை நேரத்தில், லெபனானின் தெற்கு பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் மக்கள் கூட்டம் திரண்டதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் ஹிஸ்புல்லாவின் மையப் பகுதிக்குத் திரும்பும் பயணத்தை புரட்சிகர இசையுடன், அந்த அமைப்பின் மஞ்சள் கொடிகளை அசைத்தபடி தொடங்கினர்.
இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் ஆறு வாரங்கள் நீடித்த கடுமையான மோதலுக்குப் பிறகு இந்த தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் போர் நிறுத்தம் 10 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. நீண்ட மோதலால் சோர்வடைந்த மக்களுக்கு இது ஒரு சிறிய நிம்மதியை அளித்துள்ளது.
லெபனான் சுகாதார அதிகாரிகளின் தகவல்படி, இந்த மோதலில் 2,100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் எனக் கணக்கிடப்படும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இது கடுமையான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முயன்றபோது, பல பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சில கிராமங்கள் மற்றும் நகரங்கள் தற்போதுவரைஇஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளன.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியான தஹியேவில், போரின் போது பல கட்டிடங்கள் இடிந்த நிலையில் உள்ளன. கடலோரப் பகுதிகளில் தற்காலிக முகாம்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்களில் சிலர், பாதுகாப்பு குறித்த அச்சத்தால் இன்னும் வீடு திரும்ப தயங்குகின்றனர்.





