நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார்.
நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம்.
நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார். எனினும், அவரது ஆசிர்வாதம், ஆதரவு அக்கூட்டத்தக்கு நிச்சயம் இருக்கின்றது.
மக்களுக்காக களத்தில் இறங்கி போராடிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவரின் வழிகாட்டலுடன் எமது பயணம் தொடரும்.
நுகேகொடை அரசியல் சமரானது அரசாங்கத்துக்கு நிச்சயம் கடுமை அழுத்தமாக அமையும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.





