விமானிகளை அழைக்கும் கனடா : குடியேற்ற திட்டத்தில் புதிய மாற்றங்கள்!
குடியேற்ற திட்டங்களில் சில புதிய முன்னுரிமை வகைகளை கனேடிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது.
இந்த திட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்தை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) இலக்குகளுக்கு கைக்கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
கனடாவில் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பரவலாகக் குறைத்து, திறமையான தொழிலாளர்கள் மற்றும் அறிஞர்களை ஆட்சேர்ப்பு செய்ய இந்த திட்டம் வழிவகை செய்யும்.
புதிய பிரிவுகளின் கீழ், ஆராய்ச்சியாளர்கள், மூத்த மேலாளர்கள், விமானிகள் மற்றும் விமான இயக்கவியல் போன்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் மற்றும் கனேடிய அனுபவமுள்ள வெளிநாட்டு மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அத்துடன் கனேடிய ஆயுதப்படைகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மிகவும் திறமையான வெளிநாட்டு இராணுவ விண்ணப்பதாரர்களும் இதில் அடங்குவர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு அமைச்சர் லீனா மெட்லேஜ் டயப் ( Lena Metlege Diab), கனடாவின் எதிர்காலம் மாறிவரும் பொருளாதாரத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களைப் பொறுத்தது என்று கூறியுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் கனடாவின் அரசாங்கம் வீட்டுவசதி மற்றும் சமூக சேவைகளில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயன்று வருகிறது. இதற்கமைய எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் (Express Entry system) மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




