மீண்டும் உச்சம் தொடும் இலங்கை சுற்றுலாத் துறை
இலங்கைக்கு இந்த ஆண்டில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தை நெருங்கி விட்டதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்த சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
அதன் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டது..
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 30 சதவீத வீழ்ச்சி என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் குறித்த அதிகாரி கூறியிருந்தார்.
மத்திய கிழக்கு வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களுக்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, தற்போது நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகின்றது.
ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 92 ஆயிரத்து 744 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் அதிகளவானோர் இந்தியப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





