“வடக்கு உற்பத்திகளை புலம்பெயர் தமிழர்களுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு”
உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்” மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘மேட் இன் முல்லைத்தீவு’ (Made in Mullaitivu) ஆகிய இரு நிலையங்களையும் இன்று சனிக்கிழமை (14.03.2026) காலை திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், ‘போரால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக நான் பொறுப்பேற்றபோது, ஒன்றுமேயில்லாத அடிமட்டத்திலிருந்தே மாவட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.
அன்று மாவட்டச் செயலாளராக இருந்து என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். வடக்கு மாகாணத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான, அதிக வளங்களைக் கொண்ட மாவட்டம் முல்லைத்தீவாகும்.
ஆனால், வறுமையின் பிடியிலும் இதுவே முதலிடத்தில் இருக்கின்றது. இதனை மாற்றியமைப்பதற்கு இவ்வாறான தொழில்முயற்சிகள் நிச்சயம் கைகொடுக்கும்.
இங்கு அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழும் நிலையில், அவர்களை வாழ்வாதார ரீதியில் உயர்த்திவிட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இதற்குப் பெரும் பங்களிப்புச் செய்யும் கனேடியத் தமிழர் பேரவைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்,’ என்றார்.
இவ்விசேட நிகழ்வில், வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பிரதீபன், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி திருமதி அபிராமி கைலாசபிள்ளை, உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், கனேடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டன்டன் துரைராஜா, கனேடியத் தமிழர் பேரவையின் மனிதாபிமானத் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் துஷ்யந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





