தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள 16 இந்தியர்கள் ; மீட்கக் கோரி ஒவைசி வேண்டுகோள்
தாய்லாந்து எல்லையில் அடிமைகளாகச் சிக்கியுள்ள 16 இந்தியர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 16 இந்தியர்கள், தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு, மியான்மர் – தாய்லாந்து எல்லைப் பகுதியில் மர்ம நபர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர்கள் நாள்தோறும் 18 முதல் 20 மணிநேரம் வரை கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படுவதோடு, உடல்ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்களின் கடவுச்சீட்டு மற்றும் தொலைபேசிகள் பறிக்கப்பட்ட நிலையில், மருத்துவ வசதியின்றித் தவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலையை உணர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாகத் தலையிட்டு, அவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.





