விடுதலையை தேடும் ஜனநாயகனுக்கு தொடரும் தலையிடி!
தடைகள் எல்லாம் நீங்கி, ஜனநாயகன் விரைவில் திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் வழிமீது விழிவைத்து காத்திருந்தாலும் பொங்கல் தினத்திலும் கசப்பான செய்தியே கிட்டியுள்ளது.
ஜனநாயகன் படம் தொடர்பில், பட தயாரிப்பு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறுகோரி படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு ‘U/A 16+’ சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவை எதிர்த்து தணிக்கைக் குழு இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.
குறித்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.
இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு மனு தாக்கல் செய்தது.
அம்மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது.
இதன்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில், “ படத்திற்கும் போதுமான விளம்பரங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
3 மாத்ததிற்கு பிறகு படத்தை பார்க்க மக்கள் தயாராக
இருக்கமாட்டார்கள்.
எனவே இருநீதிபதிகள் தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்.” என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை செவிமடுத்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இதன்படி முன்பு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டவாரே
ஜனவரி 21 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் அப்பட வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





