என்.பி.பி. ஆட்சியிலும் இப்படி நடக்கிறதே: தமிழ் எம்.பி. குமுறல்!
பயங்கரவாத தடைச்சட்டம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதாள குழுவுக்குவுக்கு எதிரான செயற்பாடு, போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்பவற்றை நாம் ஆதரிக்கின்றோம். இவற்றில் குற்றம் காண விரும்பவில்லை.
ஜே.ஆர். ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது மிகவும் பயங்கரமானது. அச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டன. பேரவலங்கள் அரங்கேறின. அச்சட்டத்தின்கீழ் ஜே.வி.பி. தோழர்களும் பாதிக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, அது விரைவில் நீக்கப்பட வேண்டும். அதேபோல பொறுப்பு கூறலும் அவசியம்”- என்வும் ஸ்ரீநேசன் எம்.பி. குறிப்பிட்டார்.





