அமெரிக்க ட்ரோன் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சூப்பர்சோனிக் பறப்பை அதிகரிக்கவும் டிரம்ப் உத்தரவு

ஆளில்லா வானூர்திளால் நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பை வலுப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது படைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) உத்தரவிட்டார்.
மின்சார ஆகாய டாக்சிகள்,சூப்பர்சோனிக் வர்த்தக விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியது.இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் மூன்று உத்தரவு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
இதன் மூலம் சீனாவைச் சேர்ந்த ஆளில்லா வானூர்தி நிறுவனங்களை அமெரிக்கா அதிகம் நம்பியிருக்கத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க வான்வெளி தமது படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய மத்திய பணிக்குழு ஒன்றை அதிபர் டிரம்ப் அமைக்கிறார்.
அமெரிக்க வான்வெளிக்குள் நுழையும் ஆளில்லா வானூர்திகளைக் கண்டுபிடிக்கவும் அமெரிக்க சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உதவி செய்யவும் இது வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத மிரட்டல்களை எதிர்கொள்ளும் இலக்குடன் அதிபர் டிரம்ப் இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை இயக்குநர் மைக்கல் கிராட்சியோஸ் கூறினார்,
“தேசிய பாதுகாப்பு மிரட்டல்களிடமிருந்து அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்கிறோம். ஆகாய மார்க்கமாகவும் இது பொருந்தும். குறிப்பாக, அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டி, உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ஆகியவை நடைபெற உள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் திரு கிராட்கியோஸ்.