போர் பதற்றம் – விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய சலுகை – விமான டிக்கெட் விலை குறையுமா?
போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுசுமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக IndiGo மற்றும் Air India போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் இந்த எரிபொருள் விலை உயர்வால் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதன் விளைவாக விமான டிக்கெட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதுடன், எரிபொருள் சார்ந்த கூடுதல் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விமான நிறுவனங்களின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானங்களுக்கான லேண்டிங் மற்றும் நிறுத்துமிட கட்டணங்களை 25% வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகை தற்போது உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். பின்னர் நிலைமையைப் பொருத்து இது தொடருமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த கட்டணக் குறைப்பால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நேரடியாக டிக்கெட் விலைகள் குறையாவிட்டாலும், மேற்காசிய போர் சூழ்நிலையில் மேலும் விலை உயர்வை கட்டுப்படுத்த உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், இந்த நடவடிக்கையால் விமான நிறுவனங்களுக்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.





