சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் தண்டனை – மோசடியாளர்களுக்கு 24 பிரம்படிகள் உறுதி!
சிங்கப்பூரில் குற்றவியல் சட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய மோசடி செய்பவர்கள் 24 பிரம்படிகளை கட்டாயமாக பெறுவார்கள் என உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த தண்டனை டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
மேலும் இந்த சட்டமானது ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனைகளையும் வலுப்படுத்துகிறது.
இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நமது குற்றவியல் சட்டங்கள் பயனுள்ளதாகவும், நியாயமாகவும், வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்ப செயல்படுவதையும் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேற்படி சட்டத்தின் கீழ், நிதி மோசடி செய்பவர்கள் 24 பிரம்படிகளையும், மோசடி செய்ய தங்கள் வங்கிக் கணக்கு அல்லது பிற தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்தே வழங்குபவர்கள் 12 பிரம்படிகள் வரையும் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மோசடி வழக்குகள் மற்றும் மோசடி இழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





