பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய சட்டம்: நீதி அமைச்சு கூறுவது என்ன?
“பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு நகல் தொடர்பில் மக்களின் கருத்துகளை பெற்ற பின்னரே சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும்.”
இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி சட்டவரைவு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.
தனிநபர்களும், அமைப்புகளும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்து மற்றும் யோசனைகளை நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதி அமைச்சர் கூறியவை ஹர்ஷண நாணயக்கார வருமாறு,
“ ஜனநாயகம், கருத்து சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலேயே புதிய சட்டம் அமுலுக்கு வரும்.
புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 17 பேரடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சின் இணையத்தளத்தில் மூன்று மொழிகளிலும் உள்ளன. எனவே, பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் கோரப்பட்டுள்ளன.
அவ்வாறான கருத்துகள் பெறப்பட்ட பின்னர் திருத்தம் பற்றி மேற்படி குழு தீர்மானிக்கும். சட்டவரையை திருத்தவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, தற்போதைய வரைவு இறுதியானது அல்ல. மக்கள் கருத்து கோரப்பட்டு, இறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும்.” -என்றார்.





