காசாவில் பணிப்புரியும் உதவிக் குழுக்களின் உரிமங்களை இரத்து செய்த இஸ்ரேல்
காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பணிபுரியும் 37 உதவி குழுக்களின் உரிமங்களை இஸ்ரேல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
புதிய அறிவிப்பிற்கு அமைய ஆக்சன் எய்ட், சர்வதேச மீட்புக் குழு மற்றும் நோர்வே அகதிகள் கவுன்சில் போன்ற நன்கு அறியப்பட்ட சர்வதேச அரசு சாரா அமைப்புகளின் (INGOக்கள்) உரிமங்கள் ஜனவரி 1 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படும்.
அவற்றின் செயல்பாடுகள் 60 நாட்களுக்குள் முடிவடையும். குழுக்கள் தங்கள் ஊழியர்களின் “முழுமையான” தனிப்பட்ட விவரங்களை ஒப்படைக்கத் தவறிவிட்டதாக கூறியே இஸ்ரேல் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான், நோர்வே, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அவ் அறிக்கையில், INGO செயல்பாடுகளை கட்டாயமாக மூடுவது “சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.
காசாவில் மனிதாபிமான “பேரழிவு” நிலைமை தொடர்ந்து வருவதாகவும், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் “நிலையான மற்றும் கணிக்கக்கூடிய வகையில்” செயல்படுவதை உறுதி செய்ய இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





