06 தசாப்தங்களுக்கு பிறகு காசாவில் நிலப் பதிவு செய்யும் இஸ்ரேல் – உரிமையை இழக்கும் பாலஸ்தீனியர்கள்!
1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு காசாவில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பதிவுக்கான செயல்முறையை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்நடவடிக்கையானது சர்வதேச சட்டத்தை மீறி பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கும் இடம்பெயர்வதற்கும் உதவும் என்று இஸ்ரேலிய உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.
தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ( Bezalel Smotrich) , நீதி அமைச்சர் யாரிவ் லெவின் (Yariv Levin) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
நில உரிமை தீர்வு என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை ஏறக்குறைய 06 தசாப்தங்களுக்கு பிறகு மீளவும் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவ உத்தரவுகள் மூலம் பாலஸ்தீன நிலங்களை பறிமுதல் செய்வதை அதிகரித்துள்ளது, 2025 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை சாதனை அளவை எட்டியது.
தற்போதைய நடவடிக்கை இஸ்ரேலிய குடியேற்றத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் நிறவெறி ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் பாலஸ்தீன நிலத்தை அபகரிப்பதை முறைப்படுத்துவதாக இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான பிம்கோம் (Bimkom) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிம்கோமின் ஆராய்ச்சித் தலைவரான மிச்சல் பிரையர் (Michal Braier), தங்கள் நிலத்தை முறையாகப் பதிவு செய்யாத அல்லது உரிமையை நிரூபிக்கத் தவறிய பாலஸ்தீன மக்களின் பெரும் பிரிவினருக்கு நிலப் பதிவு அணுக முடியாததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.




