திருகோணமலையில் சிசு மரணம்!
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 21 நாள் பிறந்த சிசுவொன்று இன்று (19) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் இன்று அதிகாலை 4.00 மணியளவில் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்கு போட்டிருந்த நிலையில் காலையில் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டதாகவும் இதனை அடுத்து வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிசு அர்சாத் ஆதி (21நாள்) அண்ணா வீதி அன்புவழிபுரம் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த சிசுவின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்ட வைத்திய பரிசோதனை இடம்பெற்ற வேளை சிசுவின் உடற்பாகங்கள் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சிசுவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது





