இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டு தொடக்கம்
இந்தியா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், மும்பையில் இந்திய
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மும்பையில் உள்ள லோக் பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பிரான்ஸ் தூதுக்குழுவினரும் இந்திய தரப்பில் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பின்னர், கர்நாடகாவின் வேமகலில் டாடா ஏர்பஸ் தொழிற்சாலையில் H125 என்ற எடை குறைந்த ஹெலிகொப்டர் தயாரிப்பை கூட்டாக தொடங்கிவைத்தனர்.
பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டை நாங்கள் தொடங்கியுள்ளோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘எனது அன்பு நண்பர் அதிபர் மேக்ரோனை மும்பையில் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டிற்கு அவர் என்னை அழைத்தார்.
பிரான்சின் துறைமுக நகரமான மார்சேய் இல் நாங்கள் சந்தித்தோம். இந்த முறை, ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள அவரை, இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கும் மும்பையில் அவரை வரவேற்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றுள்ளேன்.
இதன் மூலம், எங்கள் மூலோபாய கூட்டாண்மையை மக்கள் கூட்டாண்மையாக நாங்கள் மாற்றி உள்ளோம். ஏனெனில், புதுமை தனிமையில் நிகழாது, ஒத்துழைப்பு மூலம்தான் நிகழ்கிறது. எனவே, இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டில் எங்கள் குறிக்கோள், மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதாகும்.
பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என அனைத்து துறையிலும் நாங்கள் புதுமையை இணைப்போம்.
ஸ்டார்ட்அப் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இடையே வலுவான நெட்வொர்க்குகளை நாங்கள் உருவாக்குவோம்.
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே பரிமாற்றத்தை எளிதாக்குவோம். கூட்டு கண்டுபிடிப்புக்கான புதிய மையங்களை நிறுவுவோம்.
முக்கிய கனிமங்கள், உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை இன்று வலுப்படுத்துகிறோம். சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுக்கான இந்திய – பிரான்ஸ் மையத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
மேலும், விமானவியல் துறையில் திறன் வளர்ப்புக்கான இந்திய – பிரான்ஸ் மையத்தையும் நாங்கள் தொடங்குகிறோம். இவை வெறும் நிறுவனங்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தை உருவாக்கும் தளங்கள்.
உலகம் நிச்சயமற்ற காலகட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், இந்தியா – பிரான்ஸ் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஒரு ஊக்க சக்தியாக திகழ்கிறது.
பிரான்சின் நிபுணத்துவத்தையும் இந்தியாவின் அளவையும் நாங்கள் ஒன்றிணைக்கிறோம். நம்பகமான தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் கூட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மனித வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்வோம். பன்முகத்தன்மை, உரையாடல், ராஜதந்திரம் ஆகியவற்றின் மூலம் நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்’’ என்றார்.





