ஜெர்மனியில் நாடு கடத்தப்படவிருந்த 7 பேர் கொண்ட குடும்பம் தப்பியோட்டம்

ஜெர்மனியில் இருந்து நாடு கடத்துவதற்கு தீர்மானித்திருந்த 7 பேர் கொண்ட சிரிய குடும்பமொன்று தற்போது தலைமறைவாகியுள்ளது.
பல்கேரியாவில் புகலிடம் பெற்று அங்கு வசித்து வந்திருந்த குறித்த குடும்பத்தினர், சாக்சனி-அன்ஹால்ட்டின் நாம்பர்க் நகருக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில், பிராங்பேர்ட் விமான நிலையத்தின் ஊடாக அவர்களை நாடுகடத்த முயற்சி செய்த போது அவர்கள் தலைமறைவாகினர்.
குறித்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பாடசாலையில் இருக்கும் போது அதிகாரிகள் அவளை அழைத்து சென்றதாக முதலில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், உள்துறை அமைச்சு இதனை மறுத்திருந்தது. பாடசாலையை சேர்ந்த ஆசிரியர்களே சிறுமியை வெளியே கூட்டி வந்து மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்ததாக தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் குடும்பம் ஒன்றுடன் தொடர்புடைய இரண்டாவது தோல்வியடைந்த நாடுகடத்தல் முயற்சியாகும்.
ஏற்கனவே, ஒரு முறை நாடுகடத்தும் முயற்சிக்கு குடும்பம் ஒன்று எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக விமானத்தின் விமானி அவர்களை ஏற்றிச்செல்ல மறுத்திருந்தார்.
இதேவேளை, நாடுகடத்தலை நிறுத்துவதற்கான அவசர நீதிமன்ற மேல்முறையீட்டை ஹாலே மாவட்ட நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.