ட்ரம்பின் தாக்குதல் அச்சுறுத்தல் – பதிலடி கொடுத்த ஈரான்!
ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான காலம் தீர்த்துவிட்டதாகவும், எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு பதிலளித்துள்ளது.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது எனவும் ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில், “பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளது.
ஆனால் தாக்குதலுக்கு உந்தப்பட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ளும், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிலளிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய அச்சுறுத்தல்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.
இதேவேளை ஈரானிய உச்ச தலைவரின் ஆலோசகரான அலி ஷம்கானி (Ali Shamkhani), அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் “ஒரு போரின் தொடக்கமாக” கருதப்படும் என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
நிபந்தனை காலம் முடிந்தது : ஈரான் மீது தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!





