இந்தியக் கடலோர காவல்படையின் ‘வராகா’, ‘அதுல்யா’ கப்பல்கள் கொழும்பு வருகை
இந்தியக் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘வராகா’ (ICGS Varaha) மற்றும் ‘அதுல்யா’ (ICGS Atulya) ஆகிய இரண்டு கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இலங்கைக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைய இந்தக் கப்பல்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
96.2 மீட்டர் நீளம் கொண்ட ‘வராகா’ கப்பலுக்குத் தளபதி அஸ்வினி குமாரும், 50 மீட்டர் நீளம் கொண்ட ‘அதுல்யா’ கப்பலுக்குத் தளபதி அனித் குமார் மிஸ்ராவும் தலைமை தாங்குகின்றனர்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோர காவல்படையினருடன் இணைந்து இந்தியக் கப்பல்கள் விசேட கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
இரு நாடுகளின் கடலோர காவல்படைகளுக்கும் இடையிலான தொழில்முறைத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த விஜயம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





