மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 45 கோயில்களுக்கு கொடுப்பனவு
டிட்வா புயலினால் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவிலும் பாதிப்படைந்த இந்து கோயில்களை சுத்திகரிக்கும் பணிக்களுக்காக 25,000 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிப்புக்குள்ளான 42 ஆலயங்களின் பரிபாலன சபையினர் காசோலைகளை பெற்றுக் கொண்டனர்.
இதன்போது அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட டிட்வா புயலின்போது இலங்கையின் அதிக பாதிப்பினை சந்தித்த மாவட்டமாக மன்னார் மாவட்டம் நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதில் வீடுகள், வயல் நிலங்கள், கடற் தொழிலாளர்களின் படகுகள், சிறு கைத்தொழிலாளர்களின் சொத்துக்கள், என அனைத்தும் பாதிப்புக்குள்ளானது.
அதேபோன்று பெரும்பாலான மத ஸ்தலங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது .
ஆகவே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இழப்பீடு வழங்குகின்ற நிறுவனங்கள் ஊடாக நாங்கள் இழப்பீடுகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய தினம் இந்து கலாசாரத் திணைக்களத்தினால் பாதிப்படைந்த 42 கோயில்களுக்கு ஆரம்ப கட்ட பணமாக 25000 ரூபாய் காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை கோயில்களுக்கு ஏற்பட்ட முழு பாதிப்புக்குமான சேத மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்ததன் பின் அந்த கோயில்களுக்குரிய மிகுதி பணம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் செலவு மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்பு வழங்கப்படும்.
அதனை விட மன்னார் மாவட்டத்திலே பாதிப்புக்குள்ளான 75 கிறிஸ்தவ தேவாலயங்களிலே 40 தேவாலயங்களுக்கு 25000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது. மிகுதி தேவாலயங்களுக்கான பணம் கிடைக்கப்பெற்றதும் வழங்கப்பட இருக்கிறது.
அதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏழு பள்ளிவாசல்களில் ஆறு பள்ளிவாசல்களுக்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு மன்னார் மாவட்டத்திலே 3 பெளத்த விகாரைகளும் சேதம் அடைந்துள்ளன. அவர்களுக்குரிய கொடுப்பனவும் கிடைக்கப்பெற்றதன் பின்பு வழங்கப்பட இருக்கிறது” என்றார்.
குறித்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீப்,உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ்,திட்டமிடல் பணிப்பாளர் எச் ஹலீம்தீன், பிரதம கணக்காளர் கே. யோகேந்திரன் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.





