அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

அமெரிக்காவின் விமான நிலையங்களில் சோதனைச் செயல்முறையின் போது பயணிகள் இனி காலணிகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
2001ஆம் ஆண்டு, பயணியான ரிச்சர்ட் ரீட் தனது காலணிகளில் வெடிபொருளை மறைத்து விமானத்துக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக, 2006ஆம் ஆண்டில் இருந்து விமான நிலைய சோதனைகளின் போது பயணிகள் காலணிகளை கட்டாயமாக அகற்ற வேண்டிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.
இப்போது, பாதுகாப்பு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதை முன்னிட்டு, பயணிகளின் சௌகரியத்தை கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள், சில விமான நிலையங்களில் முதலில் செயல்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.