ஜெய்ஸ்வால், கில் சதம் – முதல் நாளில் இந்திய அணி வலுவான இடத்தில்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம் பெற்றார். இதேபோன்று 8 வருடங்களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்பினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குரும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்கினார்கள். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. இன்ஸ்விங், ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்பட்ட பந்துகள், அவுட் ஸ்விங் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி பொறுமையாக செயல்பட்டது.
ஆஃப் திசையை குறிவைத்து இருவரும் சீராக ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார். ஆனால் ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் எந்தவித வாய்ப்புகளையும் வழங்காமல் அற்புதமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஆனால் முதல் செஷன் முடியும் தருவாயில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார். பிரைடன் கார்ஸ் வைடாக வீசிய பந்தை கே.எல்.ராகுல் கவர் டிரைவ் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு முதல் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனது. கே.எல்.ராகுல் 78 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி 24.5 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய அறிமுக வீரரான சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பென் ஸ்டோக்ஸ் லெக் திசையில் வைடாக வீசிய பந்தை சாய் சுதர்சன் தட்டிவிட முயன்றார். ஆனால் அதை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் அற்புதமாக கேட்ச் செய்தார்.
மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் கேப்டன் ஷுப்மன் கில், ஜெய்வாலுடன் இணைந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இந்த ஜோடி வேகப்பந்து வீச்சில் விரைவாக ரன்கள் சேர்த்தது. ஜோஷ் டங்க் வீசிய 41-வது ஓவரின் கடைசி பந்தை ஜெய்ஸ்வால் டீப் பாயின்ட் திசையில் சிக்ஸர் விளாசினார். பிரைடன் கார்ஸ் வீசிய 59-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார் ஜெயஸ்வால்.
மறுபுறம் கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ் ஷாட்களை அற்புதமாக விளையாடிய ஷுப்மன் கில் 56 பந்துகளில், 8பவுண்டரிகளுடன் தனது 8-வது அரை சதத்தை கடந்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 5-வது சதமாக அமைந்தது. தேநீர் இடைவேளையில் இந்திய அணி 51 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 100, ஷுப்மன் கில் 58 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
தேநீர் இடைவேளைக்கு பின்னர் ஆட்டம் தொடர்ந்த நிலையில் ஜெய்ஸ்வால் 159 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஜோடி 129 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 102 பந்துகளில் 65 ரன்கல் எடுத்து களத்தில் உள்ளார். அதே நேரம் ஷுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.
85 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 127 ரன்களும், ரிஷப் பந்த் 65 ரன்களும் சேர்த்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்களையும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மவுன அஞ்சலி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போடடி தொடங்குவதற்கு முன்தாக இரு அணி வீரர்களும் அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்றனர்.
சவால் விடுத்த ஜோடி: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி முதல் செஷனில் அபாரமாக விளையாடியது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வெளிப்புற விளிம்புகளைத் தூண்ட முயற்சி செய்து தோல்வியடைந்தனர். இந்த ஜோடி விளாசிய 16 பவுண்டரிகளும் ஆஃப் திசையில் அடிக்கப்பட்டிருந்தன. முதல் 114 நிமிடங்களில் இந்த ஜோடி இங்கிலாந்து அணிக்கு எந்தவித வாய்ப்பையும் வழங்கவில்லை.
‘முதல் இந்திய வீரர்’ – இங்கிலாந்தில் முதல்முறையாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், ஹெட்டிங்லி டெஸ்டில் சதம் விளாசினார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிலும் முதல்முறையாக விளையாடிய போது அவர் சதம் விளாசியிருந்தார். இதன் மூலம் இந்த இரு நாடுகளிலும் பங்கேற்ற முதல் டெஸ்டிலேயே சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
லெக் திசையில் 9 ரன்: ஜெய்ஸ்வால் சேர்த்த முதல் 100 ரன்களில் லெக் திசையில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மற்ற 91 ரன்களையும் அவர், ஆஃப் திசையிலேயே எடுத்தார். தப்பித்த ஜெய்ஸ்வால்ஜெய்ஸ்வால் 45 ரன்களில் இருந்த போது பிரைடன் கார்ஸ் ஸ்டெம்பை குறிவைத்து வீசிய யார்க்கர் பந்து அவரது குதிகாலை தாக்கியது. ஆனால் இதை பிரைடன் கார்ஸ் நோ-பாலாக வீசியிருந்தார். இதனால் ஜெய்ஸ்வால் தப்பித்தார்.