ரஷ்யாவின் $9 பில்லியன் மதிப்புள்ள குண்டுவீச்சு விமானங்களை அழித்த உக்ரேன்

ரஷ்யாமீது ஆளில்லா வானூர்தி மூலம் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 9 பில்லியன் மதிப்பிலான ராணுவ விமானங்களை அழித்துள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
உக்ரேன் ரஷ்யாவில் மேற்கொண்ட ஆகப்பெரும் ஆளில்லா வானூர்தி தாக்குதல் இது.இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் உக்ரேன் தாக்குதல் நடத்தியாதாகத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் நான்கு விமானத் தளங்களில் நடத்திய தாக்குதலில் பல ராணுவ விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரேன் தெரிவித்துள்ளது. அதுகுறித்த காணொளியும் வெளியாகியுள்ளது. இருப்பினும் அந்தக் காணொளியின் உண்மைத் தன்மை இன்னும் ஆராயப்படவில்லை.
ஆளில்லா வானூர்திகள் கப்பலில் உள்ள கொள்கலன்களிலிருந்து ஏவப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்தன. இது நீண்ட நாள்களாகச் செய்யப்பட்ட திட்டம் என்றும் அவை கூறின.
ரஷ்யா-உக்ரேன் இடையே மூன்று ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தமது பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் துருக்கிக்கு ஒரு பேராளர் குழுவை அனுப்பியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) தெரிவித்தார்.
உக்ரேனியப் பேராளர் குழு ரஷ்ய அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (ஜூன் 2) பேச்சு நடத்துவார்கள் என்று ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ரஷ்யா-உக்ரேன் இடையிலான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்.எந்தக் நிபந்தனைகளும் இல்லாத முழுமையான போர் நிறுத்தம், சிறை பிடிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு, கடத்தப்பட்ட குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைத் திரு ஸெலன்ஸ்கி முன்வைத்துள்ளார்.
இதற்குமுன் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஸெலன்ஸ்கியின் கோரிக்கைகளை ரஷ்யா நிராகரித்துவிட்டது.உக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யக் குழு துருக்கி சென்றுவிட்டதாக மாஸ்கோ தெரிவித்தது.