அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தையில் ‘மிகவும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன’: அமெரிக்க அதிகாரி

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஏப்ரல் 19) ரோமில் இரு நாட்டு அதிகாரிகளும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையை அடுத்த வாரம் தொடர இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.
“இது ஒரு நல்ல சந்திப்பு, இம்முறை நல்ல புரிந்துணர்வுடன் பேசினோம்,” என்று ஈரானின் மூத்த அரசதந்திரி அபாஸ் அராஹ்சி தெரிவித்தார். அமெரிக்காவும் இந்தச் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
வரும் சனிக்கிழமை இரு நாட்டு அதிகாரிகள் இடையே சந்திப்பு நடக்கும் என்றும் அதில் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சுகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில் மூத்த அதிகாரிகள் இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
மூன்றாம் கட்ட சந்திப்பு மஸ்கட்டில் நடக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை மஸ்கட்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் இருந்தபோது அமெரிக்கா- ஈரான் இடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அதன்பின்னர் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இருநாடுகளும் அணுவாயுதம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.