இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ். நெடுந்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடல் பகுதிகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட மேலும் 10 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் அவர்களது நான்கு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்தப் பிரதேச கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





