கொல்கத்தாவில் இளம்பெண் மீது பிறந்தநாளன்று அறிமுகமான நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

கோல்கத்தாவின் ரீஜண்ட் பார்க் பகுதியில், 20 வயது இளம்பெண் ஒருவர் தமது பிறந்தநாளன்று அறிமுகமான இருவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, சந்தன் மாலிக், தீப் ஆகிய குற்றவாளிகள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களில் தீப், அரசாங்க ஊழியர் என்று கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணைப்படி, ஹரிதேவ்பூரைச் சேர்ந்த அந்தப் பெண்ணை தனது பிறந்தநாளைக் கொண்டாடப் போவதாகச் சொல்லி சந்தன், தீப் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது இந்த பலாத்காரம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“வெள்ளிக்கிழமை அந்தப் பெண்ணின் பிறந்தநாள். அதற்காக, குற்றவாளிகள் சந்தனும் தீப்பும் அந்தப் பெண்ணை தீப்பின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
“உணவுண்டு பின் வீடு திரும்ப முற்பட்ட தம்மை அந்த நபர் இருவர் தடுத்து நிறுத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இருவரும் கதவைப் பூட்டி, அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்பட்டது,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மட்டுமே அந்தப் பெண் அங்கிருந்து தப்பிக்க முடிந்தது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். வீட்டிற்குத் திரும்பியதும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை, காவல்துறையினர் புகாரைப் பதிவு செய்தனர்.
கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைத் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தன் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானதாகவும், அவர் தன்னை தெற்கு கோல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய துர்கா பூஜை குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் அந்தப் பெண் தமது புகாரில் கூறியுள்ளார்.