Tamil News

இறுதியாக யாருடன் போனில் பேசினார்? நடந்தது என்ன? தீவிர விசாரணை

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி. தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையடுத்து விரைவில் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இரத்தம் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 6-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் அதன் ரிலீஸ் பணிகளை மேற்கொண்டு வந்தார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இரவு தூங்கச்சென்ற மகளின் அறைக்கு அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனி சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதைப்பார்த்து பதறிப்போன விஜய் ஆண்டனி, மீராவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து மீராவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், இதற்கான உண்மை காரணத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக மீராவின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் அவர் யாருடன் கடைசியாக பேசினார் என்பதை ஆய்வு செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர மீரா படித்த பள்ளியிலும், அவரது தோழிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அதேபோல் மீரா தற்கொலை செய்துகொண்ட அறையில் தடயவியல் அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version