அமெரிக்கா,உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் ‘இராஜதந்திர தீர்வை’ நெருங்கிவிட்டன ; புதினின் சிறப்பு தூதர் டிமிட்ரிவ்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு “இராஜதந்திரத் தீர்வுக்கு மிக அருகில்” இருப்பதாக அதிபர் புதினின் சிறப்புத் தூதர் ஒருவர் அறிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev)அமெரிக்காவில் இருக்கும்போது, CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார்.
“ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகள் இராஜதந்திரத் தீர்வுக்கு நியாயமான அளவு அருகில் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார். ஆனால், இந்தத் தீர்வு என்னவாக இருக்கும் என்பது பற்றிய எந்தத் தகவலையும் அவர் வெளியிடவில்லை.
சமீபத்தில் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த போதிலும், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை என்றும், ரஷ்யாவின் நலன்கள் மரியாதையுடன் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே இராஜதந்திரத் தீர்வு சாத்தியமாகும் என்றும் டிமிட்ரிவ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, ட்ரம்ப் மற்றும் புடின் இடையே நடைபெறவிருந்த உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், டிமிட்ரிவ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை, ஒத்திவைக்க மட்டுமே பட்டுள்ளது என்றும், “இது ஒருவேளை பிந்தைய திகதியில் நடக்கும்” என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.





