வரி உயர்வைத் தவிர்க்க வர்த்தகப் போர் நிறுத்தத்தை நீட்டித்துள்ள அமெரிக்கா- சீனா

அமெரிக்காவும் சீனாவும் ஒன்று மற்றதன் மீது விதிக்கவிருந்த வரிகளை மேலும் 90 நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளன. அதன் மூலம் ஒன்று மற்றதன் மீது விதிக்கவிருந்த மூன்று இலக்க வரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சீனாமீது புதிய வரி விதிப்பை நவம்பர் 10ஆம் திகதி வரை நிறுத்திவைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது ட்ருத் சோஷல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதேபோன்ற ஒப்பந்தத்தைச் செய்ததாக சீன வர்த்தக அமைச்சு கூறியது.
“இருநாட்டுப் பொருளியல் உறவில் உள்ள விரிசல் குறித்து சீனாவுடன் அமெரிக்கா தொடர்ந்து கலந்துரையாடுகிறது. தேசிய, பொருளியல் பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் பேசுகிறோம்,” என்று டிரம்ப்பின் நிர்வாக உத்தரவு குறிப்பிட்டது.அத்தகைய கலந்துரையாடல்கள் மூலம் பரஸ்பரம் அல்லாத வர்த்தக ஏற்பாடுகளுக்குத் தீர்வுகாணும் வழிகளை ஆராய்வதோடு பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் ஆகிய அக்கறைகளை முன்வைக்க முடியும் என்று அமெரிக்கா சொன்னது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புதிய வரிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு நடப்புக்கு வரவிருந்தது.
சீனப் பொருள்கள்மீது அமெரிக்கா 145% வரிகளை விதிக்க திட்டமிட்டது. சீனா அமெரிக்கப் பொருள்கள்மீது 125% வரிகளை விதிக்கவிருந்தது. தற்போதைக்குச் சீன இறக்குமதிகள் மீது 30% வரியை அமெரிக்காவும் அமெரிக்க இறக்குமதிகள்மீது 10% வரியைச் சீனாவும் விதித்துள்ளன.“என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான தமது நல்லுறவை அவர் குறிப்பிட்டார்.
ஜூன் 5ஆம் திகதி இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது எட்டப்பட்ட ஒப்புதலை அமல்படுத்துவதே புதிய வரிகளை ஒத்திவைப்பதற்கான காரணம் என்று சீனா சொன்னது.
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக உடன்பாட்டைக் கிட்டத்தட்ட எட்டும் நிலையை அடைந்துவிட்டதாக டிரம்ப் சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் கடந்த வாரம் கூறினார்.உடன்பாடு எட்டப்பட்டால் இவ்வாண்டு இறுதிக்குள் ஸியைச் சந்திக்கவிருப்பதாகவும் அவர் சொன்னார்.