புத்தாண்டு பிறந்த கையோடு மாகாணசபைத் தேர்தலை கோருகிறது மொட்டு கட்சி!
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது
புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (01) விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
“நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது என்பது புலனாகின்றது. இதனால் தேர்தலை பிற்போடுவதற்குரிய சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்படக்கூடும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், சட்ட ரீதியாக அவற்றை எதிர்கொண்டு நாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என அவர் மேலும் கூறினார்.





