தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டம் நாளை முன்வைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நாளை (07) முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுவார். இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும்.
2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை மறுதினம் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும்.
14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
2026 பாதீட்டில் நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 634 பில்லியன் ரூபா இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.
அத்துடன், உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபைகள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பொதுநிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டமாகும்.





