திடீர் திருப்பம்: தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தது தே.மு.தி.க.!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விடயங்கள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் யாருடன் கூட்டணி என்ற விடயத்தில் மௌனம் காத்து வந்த தே.மு.தி.க. இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சங்கமித்துள்ளது.
சென்னையில் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று முற்பகல் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தான் எதிர்கொண்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே 29 எம்.எல்.ஏக்களுடன் வலுவான அரசியல் பயணத்தைத் தொடங்கியது.
எனினும், அதன்பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக் கூட்டணியாக களம் கண்டு தோல்வியை சந்தித்தது.
2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தே.மு.தி.க. விஜயகாந்தின் மறைவின் பின்னர் அக்கட்சி எதிர்கொள்ளும் பிரதான தேர்தல் இதுவாகும்.





