இலங்கை – திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை!

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த தொழிற்சந்தையில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் தொழில் வழங்குனர்களாக தனியார் நிறுவனங்களும் உள்ளூர் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் தங்களின் ஆற்றல் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தங்களின் தொழிற்சவாலை வெற்றி கொள்ளக் கூடியதாக இந்த தொழிற்சந்தை அமைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் நா. குகேந்திரா, மாவட்ட இணைப்பாளர் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெசினா பஹ்மி, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச் ஹில்மியா, பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்தேடுநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.