பிரித்தானியாவில் மாறும் பணிச்சூழல் – தொலைதூரப் பணி தொடர்பான முறைப்பாடுகள் குறைவு
கோவிட்-19 தாக்கம் ஏற்பட்டதிலிருந்து முதன்முறையாக, கிரேட் பிரிட்டனில் தொலைதூரப் பணி தொடர்பாக முதலாளிகளுக்கு எதிராக வேலைவாய்ப்புத் தீர்ப்பாயங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாய உத்தரவுகள் இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு சந்தை இறுக்கமடைந்துள்ளதால், பல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை விட்டு விலகத் தயங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
மனிதவள ஆலோசகர்களான Hamilton Nash மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் தொலைதூரப் பணியை மையமாகக் கொண்டு 54 வழக்குகள் தீர்ப்பாயங்களில் முடிவடைந்துள்ளன. இது 2024-இன் 62 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 13% குறைவாகும்.
ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் மூலம், 2019 ஆம் ஆண்டு பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலையை விட பத்து மடங்கு அதிகரித்திருந்த வழக்குகள் மீண்டும் குறையும் நிலைக்கு வந்துள்ளன.
2019 இல் வெறும் 06 வழக்குகள் மட்டுமே தீர்ப்பாயத்தை எட்டிய நிலையில், 2024-இல் அது 62 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 காரணமாக பணிச்சூழலில் ஏற்பட்ட பெரிய மாற்றம், அலுவலக அடிப்படையிலான பல வேலைகளை நிரந்தரமாக மாற்றியுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, கிரேட் பிரிட்டனில் பணிபுரியும் பெரியவர்களில் 28% பேர் தற்போது கலப்பு (Hybrid) முறையில் பணிபுரிகின்றனர் அதாவது, அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றுக்கு இடையில் நேரத்தை பகிர்ந்து செயற்படுகின்றனர்.





