இந்திய படகுகளில் இருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழில் ஏலம்!
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தால் இன்று இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது.
நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருள்கள் இதன்போது ஏலம் விடப்பட்டன.
இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன.
இந்த ஏல விற்பனையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கேள்வி கோரல்களை முன்வைத்துத் தமக்குத் தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
அரச உடமையாக்கப்பட்ட இந்தப் பொருள்களை விற்பனை செய்ததன் மூலம் கணிசமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.





