ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா விராட் கோலி?

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்திய அணிக்கு அனைத்து வடிவங்களிலும் கேப்டன் ஆக இருந்த விராட் கோலி ஒரு முன் உதாரணமாக இருந்தார். குறிப்பாக கிரிக்கெட் வீரர் பிட்னஸில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்து காட்டியவர் விராட் கோலி தான்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பு டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல்லின் தலைவரான அருண் தூமால் விராட் கோலி தனது முடிவை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மற்ற பார்மட்களை விட டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மிகவும் முக்கியமான ஒருவர்.
இங்கிலாந்து போன்ற ஒரு நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது கண்டிப்பாக அனுபவம் தேவை, அதுவும் நான்காவது இடத்தில் விராட் கோலி போல ஒருவர் களமிறங்கினால் எதிர் அணிக்கு ஒரு பயம் ஏற்படும். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இடத்தை நிரப்புவது மிகவும் சிரமமான ஒன்று. டென்னிஸ் போட்டிகளுக்கு பெடரர் எப்படியோ அதே போல தான் கிரிக்கெட்டிற்கு விராட் கோலி என்று அருண் தூமால் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 சீசன்களாக ஐபிஎல்லில் விளையாடி வரும் விராட் கோலி தனது பிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு சீசன்களிலும் அதிகமான ரன்களை குவித்து வருகிறார். இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறும் பட்சத்தில் விராட் கோலி அடுத்து சில ஆண்டுகளுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று அருண் தூமால் கூறியுள்ளார்.
பிசிசிஐயின் முன்னாள் பொருளாளர் ஆன அருண் தூமால் தற்போது ஐபிஎல்லின் தலைவராக செயல்பட்டு வருகிறார். மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கூறுவதால், விராட் மீண்டும் விளையாடுவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
முதல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாப் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முதல் அணியாக சென்றுள்ளது ஆர்சிபி. தங்களது முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்லுமா என்று ஆர்சிபி மற்றும் அவர்களது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டுள்ளனர். முன்னதாக 2009. 2011. 2016 ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சென்றது ஆர்சிபி. ஆனால் 3 முறையும் தோல்வியை தழுவியுள்ளது. விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் இன்றுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விராட் கோலி போன்ற ஒருவர் கிரிக்கெட்க்கு தேவை. அவர் மைதானத்தில் இருந்தாலே வீரர்களுக்கு ஒரு கூடுதல் நம்பிக்கை கொடுக்கும் என்று அருண் தூமால் தெரிவித்துள்ளார்.