ஈரான் போர் : மிகையான நம்பிக்கையில் ட்ரம்ப் – கவலையில் வெள்ளை மாளிகை பணியாளர்!
ஈரான் போர் மற்றும் அதன் உள்நாட்டுத் தாக்கங்கள் குறித்து, தனது உதவியாளர்கள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மிகையான நம்பிக்கையூட்டும் பார்வையை அளிப்பதாக வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் (Susie Wiles) கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதல் உலக நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை பிரச்சினை பொருளதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
அத்துடன் , 13 அமெரிக்கப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள சூசி வைல்ஸ் (Susie Wiles), இந்த மோதலுடன் தொடர்புடைய அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்கள் குறித்து அதிபரிடம் மேலும் வெளிப்படையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே போரில் கிடைத்ததாகக் கருதப்படும் வெற்றிகளை டிரம்ப் பகிரங்கமாகப் பறைசாற்றி வருகிறார்.
அமெரிக்கா வெற்றி பெற்று வருவதாகவும், ஈரான் பேரழிவுகரமான இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறிவருவதோடு, வெற்றிகரமான தாக்குதல்களின் காணொளிகளையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும் சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, 59 சதவீத அமெரிக்கர்கள் ஈரான் போரை எதிர்க்கின்றனர் என்றும், 55 சதவீதத்தினர் அதன் முன்னேற்றம் குறித்த துல்லியமான தகவல்களை நிர்வாகம் வழங்கவில்லை என்று நம்புகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.





