சுயநினைவை இழந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் – தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் கோம் (Qom) நகரில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூதரகத் தகவல்களை மேற்கோள் காட்டி, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது இருப்பிடம் குறித்து இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது முதன்முறையாகும்.
தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 87 மைல் தொலைவில் அமைந்துள்ள கோம், ஷியா முஸ்லிம்களின் முக்கிய புனித நகரமாகவும் மத மையமாகவும் கருதப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகளுக்கு அவரது இருப்பிடம் தெரிந்திருந்ததாக கூறப்பட்டாலும், அது பொதுவெளியில் வெளியானது இதுவே முதல் முறை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்றதிலிருந்து மொஜ்தபா கமெனி பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. அரசு ஊடகங்கள் சில தகவல்களை வெளியிட்டிருந்தாலும், அவரது நேரடி புகைப்படங்கள்
அல்லது வீடியோக்கள் வெளியாகாதது இந்த தகவல்களுக்கு ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா கமெனியின் உடலை கோம் நகரில் அடக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது.





