ஓடவும் மாட்டேன்: ஒளியவும் மாட்டேன்! சிறைவாசம் குறித்து நாமல் கருத்து!
“தமது தேவைக்கேற்ப சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கின்றது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை பார்வையிடுவதற்காக சென்று வரும் வழியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாம் பொலிஸாரைக் கண்டு ஓடி ஒளியமாட்டோம். உரிய வகையில் அறிவித்தல் வந்தால், பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் வழங்குவோம். அதன்பின்னர் சட்டத்தை செயல்படுத்தலாம்.
அதனைவிடுத்து மக்களின் பணத்தை வீண்விரயம் செய்து, குழுக்களை அனுப்பி எதற்காக தேடுதல் நடத்த வேண்டும்?
இந்நாட்டில் பொலிஸை அரசியல் மயப்படுத்துவதற்கு பொலிஸ்மா அதிபர் முற்படுகின்றார். இதனால் பொலிஸ்துறைக்குள்ள நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படக்கூடும்.
அதேவேளை, எம்மை அடுத்த மாதம் சிறையில் அடைப்போம் என நாடாளுமன்றத்தில் எமக்கு ஆளுங்கட்சியினரால் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.” – என்றார் நாமல் ராஜபக்ச எம்.பி.





