சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – நிக்கோலஸ் பூரனின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். 29 வயதில் தனது ஒய்வை அறிவித்து பலருக்கும் அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
“ஆழமாக யோசித்த பிறகே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவை அறிவிக்கிறேன்” என சமூக வலைதள பதிவு மூலம் பூரன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். திங்கள்கிழமை அன்று இந்த அறிவிப்பு வெளியானது. ஓய்வு குறித்த முடிவை தங்களிடம் பூரன் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. தேசிய அணிக்காக அவரது பங்களிப்புக்கு கிரிக்கெட் நிர்வாகம் நன்றி கூறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக பூரன் திகழ்கிறார். 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, 2275 ரன்கள் எடுத்துள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது இல்லை.
கடைசியாக கடந்த 2023-ல் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், கடந்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக டி20 போட்டியிலும் அவர் விளையாடி இருந்தார். தற்போது நடைபெறும் இங்கிலாந்து மற்றும் அடுத்து வரும் அயர்லாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓய்வு பெறுவதாக பூரன் அறிவித்துள்ளார்.
அன்மையில் முடிந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 524 ரன்களை பூரன் எடுத்திருந்தார். இதில் அவரது பேட்டிங் சராசரி 40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 200.