இலங்கையில் அரசியல் புயலை கிளப்பிவிட்டுள்ள ஆங்கில பாடத்திட்டம்: பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்து!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச Wimal Weerawansa.
தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாடப்புத்தகத்துக்கான மாதிரியில் வயது வந்தோருக்கான இணையத்தள முகவரி அச்சிடப்பட்டுள்ள விவகாரம் இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சில தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறிப்பாக கல்வி மறுசீரமைப்பை சீர்குலைக்கும் வகையில் இது விடயத்தில் சதி இடம்பெற்றுள்ளதா என கல்வி அமைச்சின் செயலாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். அவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையிலேயே கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் அவசர ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
“ இதுபோன்ற குறிப்புகள் பாடசாலை மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும். பொருத்தமற்ற விடயங்களைப் பரிசோதிக்க வழிவகுக்கும் .
இது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். உயர் மட்டங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது.
பிரதமர் உடனடியாக கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் . அவ்வாறு செய்யத் தவறினால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அரசாங்கம் இது விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அணிதிரட்டப்படுவார்கள்.” எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை,தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்தில் அச்சிடப்பட்டிருந்த வயது வந்தோருக்கான இணையத்தள முகவரியை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தடை செய்துள்ளது.





